பிரித்தானியாவிற்கான உத்தியோகப்பற்ற திடீர் பயணமொன்றை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மேற்கொண்டுள்ளார்.
சந்திரிகா அம்மையாருடன், தமது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருகடிகளைத் தீர்க்கும் வண்ணம் பேச்சுவார்த்தை நடத்த இலண்டன் வந்துள்ளார் என்று சில செய்தி நிறுவனங்கள் ஊகம் வெளியிட்ட நிலையில் அவரின் பயணமானது, அதற்கும் பாற்பட்டதொரு நகர்விற்கான பயணமாகக் கருத இடமுண்டு.
இருப்பினும் பிரித்தானியா என்கிற பின்கதவால் இந்தியாவை அணுகும் அதிரடி இராஜதந்திர நகர்வாகவே இதனை நோக்கலாம்.
பாகிஸ்தானின் இலங்கைப் பிரசன்னம் குறித்து நோர்வேயிடம் இந்தியா சுமத்திய குற்றச்சாட்டினால் எழுந்த புதிய சிக்கல்களால் தடுமாறிய ராஜபக்ச, பிரித்தானியாவினூடாக சில நகர்வுகளை மேற்கொள்ள முயற்சிக்கிறார்.
அத்துடன் அதிகரித்து வரும் தமிழக எழுச்சிக் கோலங்கள், இந்திய மத்திய அரசின் இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் மாறுதல்களை உருவாக்கலாம் என்கிற பதற்றமும் மகிந்தரைத் தொற்றிக் கொண்டுள்ளது.
அன்மைக்காலமாகவே, கண்காணிப்புக் குழுவின் மாதாந்த அறிக்கைகளும், ஐ.நா. சபையின் உப பிரிவுகளின் நேரடி களநிலவரச் சாட்சியங்களும் சிறிலங்கா அரசுக்குச் சாதகமாக அமையவில்லை.
இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னுமொரு முக்கிய செய்தியானது, சமாதான முயற்சிகளின் அனுசரணையாளராக விளங்கும் நோர்வே ஊடாகச் சாதிக்க முடியாத விடயமொன்றை நோர்வேயின் பின்தளச் சக்திகளில் ஒன்றான பிரித்தானியாவைப் பயன்படுத்தி தமக்குச் சாதகமான கருத்து நிலையை ஏற்படுத்தவும் மகிந்தர் முயற்சிக்கிறார்.
இருப்பினும் இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நேரடிப் பங்களிப்பிற்குரிய அகச் சூழ்நிலை உருவாக்கப்படுவதற்கு முன், சமாதான முன்னெடுப்புக் களத்தில் ஏற்கனவே நிலை கொண்டுள்ள சார்புச் சக்திகளை ஒன்று திரட்டுவதிலும், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்கிற பொதுக் கருத்தியலைத் தக்க வைக்கவும் மகிந்தர் வேகமாகச் செயற்படுகிறார்.
இதுவரை காலமாக, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது தனித்துவத்தைப் பேணிவந்த இந்தியா, அண்மைக் காலமாக மேற்குலக அச்சோடு பயணிக்க முயல்வதனையும், அவர்களோடு இணைந்து சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் அரசியல் தீர்வொன்றினை தம்மீது வலிந்து திணிக்க முயற்சிக்கலாம் என்ற அச்சமும் சிறிலங்கா அரசிடம் ஏற்பட்டுள்ளது.
ரணிலுடன் இணைந்து பொதுக்கருத்தினை உருவாக்கி, இனப்பிரச்சனைக்கான தீர்வுத் திட்ட வரைபினை முன்வைக்கும் வரையான காலத்தில், புலிகளின் தாக்குதல்களிலிருந்து அரசினைப் பாதுகாக்க, இராணுவ உபகரண உதவிகளையும் பிரித்தானியாவிடம் கோரலாம்.
தனது பலத்தை அதிகரிக்கவும், அதிகரித்து வரும் பொருளாதாரச் சுமையினைக் குறைக்கவும், மேற்குலகு திருப்திபடும்படி அடுக்கடுக்கான வாக்குறுதிகளை அள்ளி வீசவும் சிங்கள ஆட்சியாளர்கள் தயங்கமாட்டார்கள்.
இருப்பினும் “எதைப் பற்றி பேசுவதாயினும், தமது மேற்குலகின் பிரதிநிதி நோர்வேயை அணுகுங்கள்” என்பதே பிரித்தானியாவின் பதிலாக அமையலாம்.
நன்றி>புதினம்.


