ஆகஸ்ட் 29th, 2006- ‍க்கானத் தொகுப்பு

ஜெயலலிதா கடும் சீற்றம்.

ஆகஸ்ட் 29, 2006

எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தியது ஒட்டுமொத்த தமிழர்களின் மனதை புண்படுத்துகின்ற அநாகரிக செயல்: ஜெயலலிதா கண்டனம்

யாழ்ப்பாணத்தில் எம்.ஜி.ஆர். சிலையை சிறிலங்கா இராணுவத்தினர் தார்பூசி சேதப்படுத்தியமைக்கு தமிழக முன்னாள் முதல்வரும் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள வல்வெட்டித்துறையில் நிறுவப்பட்டுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலை மீது சிங்கள இராணுவ வீரர்கள் தார் பூசி சேதப்படுத்தியுள்ளதாக பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தியைப் பார்த்து தாம் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
இந்த அநாகரிகச் செயல், உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களின் மனதை புண்படுத்துகின்ற செயல்.
இதற்கு தமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்

பிரபாகரனின் நிழலைக்கூட தொடஇயலாது-வைரமுத்து.

ஆகஸ்ட் 29, 2006

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் நிழலைத் தொடக்கூட சிங்கள இராணுவத்துக்கு இயலாது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு படுகொலையைக் கண்டித்து சென்னையில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்ற முழுநாள் உண்ணாநிலைப் போராட்டத்தில் வைரமுத்து ஆற்றிய கண்டன உரை:
ஈழத்தின் செஞ்சோலைப் பிஞ்சுகளின் துயரத்தில் கண்ணீரஞ்சலி செலுத்துவதற்காகவும் சிங்கள வெறித்தனத்துக்கு நம்முடைய கண்டனத்தைத் தெரிவிக்கவும் தமிழர் பேரவை தலைவர் சுப.வீ. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார்.
இந்தப் படத்தில் உள்ள பிஞ்சுக் கால்களைப் பார்த்தால்-
இந்தப் படத்தில் சுரைக்காய்களைப் போல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பிஞ்சுப் பிணங்களைப் பார்த்தால்-
இவர்கள் போராளிகளுக்காக பயிற்சி பெற்றவர்கள் என்று சொல்லுகிற பொய் உடைகிறது என்பது நாட்டுக்கு விளங்கும்.
நண்பர்களே! மூன்று வேண்டுகோளோடு இங்கு வந்திருக்கிறேன
முதல் வேண்டுகோள்- தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு:
கும்பகோணத்தில் நடந்தது தமிழ்நாடு சகித்துக் கொள்ள முடியாத துயரம்- பள்ளிப் பிள்ளைகளின் மரணம்.
அந்தப் பள்ளிப் பிள்ளைகளின் மரணத்துக்கு தமிழ்நாடே எழுந்து நின்று அழுதது.
இந்த செஞ்சோலைப் பிஞ்சுகளின் துயரம் அந்த அளவுக்கு வருத்தியிருக்கிறதா? இல்லையா? என்பதை நெஞ்சைத் தொட்டுச் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம்.
விபத்துக்கு அழக்கூடிய தமிழன்- ந
கொலைக்கு அழமாட்டாயா? என்று தமிழ்நாட்டு மக்களை நோக்கி கேட்க வேண்டும்.
இந்த துயரத்தில் நாம் பங்குகொள்ள வேண்டும்.
கடைசித் தமிழன் உள்ளவரைக்கும் அங்கு அந்தப் போராட்டம் ஓயவேப் போவதில்லை என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுகிறேன்.
சிங்கள இராணுவம் நேற்று ஒப்புக் கொண்டிருக்கிறது- போரால் இந்தப் பிரச்சனையை தீர்த்துவிட முடியாது- போர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை- விடுதலைப் புலிகளை நாங்கள் வெல்ல முடியாது என்று ஒட்டுமொத்தமாக சிங்கள அரசு பதிவு செய்திருக்கிறது.
பிரபாகரனின் நிழலைத் தொடக் கூட சிங்கள இராணுவத்துக்கு இயலாது என்பதுதான் உண்மை.
சிங்கள அரசுக்கு ஒரு வார்த்தை-
யுத்தம் செய்கிறீர்களே- உங்கள் யுத்தத்தில் உணர்ச்சி இருக்கிறதா?
தமிழன
தன் நிலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக-
இனத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக-
தன் உரிமைகளைப் பேணிக் கொள்வதற்காக-
தன் பூர்வீக நிலத்தின் மீதான உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்காக-
உணர்ச்சியோடு போராடுகிறான்.
ஒரு முயலை ஒரு சிங்கம் துரத்திச் செல்கிறது. சிங்கத்தின் வேகம் அதிகமா? முயலின் வேகம் அதிகமா? என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது சிங்கத்தின் வேகம்தான் அதிகமாக இருக்கும் என்று தப்பான தகவல் தரப்பட்டது.
சிங்கம் உணவுக்காக ஓடுகிறது.
முயல் உயிரைக் காக்க ஓடுகிறது.
முயலின் வேகம்தான் சிங்கத்தின் வேகத்தைவிட அதிகமாக இருக்கும்.
அதுபோல்தான் சிங்களவர்கள் கூலிக்கு மாரடிக்கிறார்கள்-
நம் தமிழர்கள் இனமானம் காக்கப் போராடுகிறார்கள்.
இந்த உணர்ச்சிகள் இருக்கும் வரை அவர்களை வெல்லவே முடியாது.
இந்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள்-
இந்திய அரசாங்கமே! நாங்கள் இந்திய இறையாண்மைக்கு நாங்கள் என்றும் பங்கம் விளைவிப்பவர்கள் அல்ல.
சட்டப்பேரவையில் முதல்வர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றியிருக்கிற தீர்மானம் ஒன்றே போதும் அவரது நெஞ்சின் வலி என்ன என்று.
அவரால் இந்திய இறையாண்மைக்குட்பட்டு என்ன வகையில் தன் வலியை- கருத்தை வெளிப்படுத்த முடியும்- ஆதரவை தெரிவிக்க முடியும் என்பதை அவர் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.
இந்திய அரசே!
நீ சிங்கள அரசுக்கு ஆயுதம் வழங்கினால் அங்கு தமிழினம் பூண்டோடு அழிக்கப்பட்டு விடும். தமிழர்களுக்கு அதுவிரோதம்.
ஒருவேளை இந்திய அரசு ஆயுதம் வழங்காததால் பாகிஸ்தானிடம் சிங்கள அரசு ஆயுதம் வாங்கிக் கொண்டால் அது தமிழனுக்கு மட்டும் ஆபத்து அல்ல- இந்தியாவுக்கே அது ஆபத்து என்பதை மறந்துவிடக் கூடாது.
சிங்களர்கள் சூழ்ச்சிக்காரர்கள்.
வங்காள விரிகுடாவில் ஒரு கையை நீட்டி இந்தியாவிடம் உதவி கேட்கிறார்கள்.
அரபிக் கடலில் ஒரு கையை நீட்டி பாகிஸ்தானிடம் உதவி கேட்கிறார்கள்.
இந்திய அரசே! தெளிவாக இரு! பாகிஸ்தான் ஆயுதம் உள்ளே போகாமல் தடுத்து விடு- தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களுக்கு ஆயுதம் வழங்கும் எண்ணத்தையே நிறுத்திவிடு.
இந்த உண்ணாநிலைப் போராட்டத்தால் பிரச்சனைகள் தீரும் என்று போலிக் கனவு காண நாம் தயாராக இல்லை. இது ஒரு அடையாளம்.
இலங்கைத் தமிழன் அங்கே பாதிக்கப்பட்டால் இங்கேயிருக்கிற தமிழன் சந்தோசத்துடன் விழித்திருக்கிற முடியாது. அவன் மகிழ்ச்சியோடு ஓய்வு கொள்ள முடியாது.
அந்த இரத்தம் இங்கே துடிக்கும். அங்கே தசை விழுந்தால் இங்கே இருதயம் துடிக்கும் என்ற உணர்ச்சியை வெளிப்படுத்த இந்த உண்ணாநிலை என்றார் வைரமுத்து.
நன்றி>புதினம்.

தமிழக அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமி சாடல்.

ஆகஸ்ட் 29, 2006





யுத்தம் தீர்வாகாது: இந்திய வெளியுறவுச் செயலரின் கருத்துக்கு தமிழக அமைச்சர் எதிர்ப்பு
இலங்கை இனப்பிரச்சனைக்கு யுத்தம் தீர்வாகாது என்று இந்திய வெளியுறவுச் செயலர் சொல்லியிருப்பது அவரது சொந்தக் கருத்து என்று தமிழக அமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளருமான ஆற்காடு நா.வீராசாமி சாடியுள்ளார்.
முல்லைத்தீவு செஞ்சோலை படுகொலையைக் கண்டித்து சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை தமிழர் பேரவையின் சார்பில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தலைமையில் உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியது.
தமிழ்நாடு மின்துறை அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமி இந்த உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
23 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். அதனால் அகதிகளாக இங்கு வருகிறார்கள்.
சட்டமன்றத்தில் இலங்கை அரசுக்கு எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

வேதனை என்னவென்றால் செஞ்சோலையில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று இலங்கை அதிகாரி கூறியுள்ளார். அங்கு போராளிகளின் பயிற்சித் தளம்தான் இருந்தது என்று உண்மைக்குப் புறம்பாக கூறிய செய்தியும் இங்கு பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.
செஞ்சோலை சம்பவத்தைக் கேள்விப்பட்ட உடன் கலைஞர் மிகவும் வேதனையடைந்தார். உடனே இந்திய அரசைத் தொடர்பு கொண்டு அதற்கு கண்டனம் தெரிவிக்கும்படியும் தமிழர்களை அழிக்கும் செயலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
செஞ்சோலைக் குழந்தைகள் படுகொலைக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஐ.நா. சபையும் கண்டனம் தெரிவித்து அதன் பிரதிநிதியை அனுப்பி அறிக்கை தருமாறும் கேட்டது. அமெரிக்காவும் தனது பிரதிநிதியை அனுப்பியுள்ளது. ஆனால் இன்னும் குண்டுகளை வீசி குழந்தைகளை அழித்து வருகிறார்கள்.
அதனால் அங்கிருந்து அகதிகளாக தமிழர்கள் இங்கு வருகிறார்கள். தமிழக அரசு அவர்களை நன்றாகப் பராமரித்து வருகிறது. அவர்களின் வேதனைக் கண்டு நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.
அங்கிருக்கும் தமிழர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு வேண்டும்.
சண்டை தீர்வாகாது என்று இந்திய வெளியுறவுச் செயலர் சொல்லியிருப்பது அவரது சொந்தக் கருத்து.
தற்போது இலங்கையில் தமிழ் மக்கள்- பசியால் பட்டினியால் மருந்தில்லாமல் மிகவும் துன்பப்படுகிறார்கள். அங்கு தமிழினமே அழியும் நிலையில் உள்ளது என்று கலைஞரிடத்தில் அங்கிருந்து வந்த சகோதரி ஒருவர் தெரிவித்தார். ஏற்கனவே ஒருமுறை தி.மு.க.சார்பில் உணவுப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பிய போது அந்நாட்டரசு மறுத்துவிட்டது.
இந்திய அரசின் நடவடிக்கைகள் ஆறுதல் தருவதாக இல்லை. இந்திய அரசு தலையிட்டு போரை நிறுத்தி போராளிகளையும் பொதுமக்களையும் காப்பாற்ற வேண்டும்.
தனி ஈழம் கிடைப்பதற்குள் அங்குள்ள தமிழர்களே இருக்கமாட்டார்களோ- தமிழினமே அழிந்துவிடுமோ என்கிற அச்சம் இருக்கிறது. எனவே இந்திய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றார் ஆற்க்காடு வீராசாமி.
நிகழ்வில் நடிகர் சத்யராஜ் பேசுகையில்,
செஞ்சோலையில் 61 சிறுமிகளைக் கொன்றுவிட்டு அதற்கு சப்பைக்கட்டு கட்டுவது மிகவும் கோழைத்தனமானது. ஈழத் தமிழர்கள் விடியலையும் சுதந்திரக் காற்றையும் விரைவில் சுவாசிப்பார்கள் என்றார்.
கவிஞர் வைரமுத்து பேசியதாவது:
கும்பகோணம் தீ விபத்தில் மாணவிகள் எரிந்தபோது தமிழ்நாடே எழுந்து அழுதது. செஞ்சோலையில் மாணவிகள் கொல்லப்பட்டபோது அப்படி நிகழ்ந்ததா என்பதை நம் நெஞ்சைத் தொட்டுப் பார்க்க வேண்டும். விபத்துக்கு அழுகின்ற தமிழன் கொலைக்கு அழமாட்டானா?

விடுதலைப் புலிகளை வெல்லவே முடியாது என்று சிங்கள இராணுவம் ஒப்புக்கொண்டிருக்கிறது.
இந்திய அரசாங்கமே! நாங்கள் இந்தியாவின் இறைமைக்கு எதிரானவர்கள் அல்ல. தமிழ்நாடு சட்டமன்றத்திலே இறைமைக்கு உட்பட்டு கண்டனத் தீர்மானத்தை கலைஞர் நிறைவேற்றியுள்ளார் என்பது அவரது வலியை வெளிப்படுத்துகிறது. இந்திய அரசே! சிங்களவருக்கு ஆயுதம் கொடுப்பது தமிழருக்கு விரோதம். இந்தியா ஆயுதம் கொடுக்காதபோது பாகிஸ்தானிடம் சிங்களவர் ஆயுதம் வாங்குவது இந்திய இறைமைக்கு விரோதம்.
சிங்களவன் சூழ்ச்சிக்காரன். வங்களா விரிகுடாவிலும் கையை நீட்டி ஆயுதம் கேட்கிறான். அரபிக் கடலிலும் கையை நீட்டி ஆயுதம் கேட்கிறான். சிங்கள இராணுவத்தால் பிரபாகரனின் நிழலைக் கூட தொட முடியாது.
அன்னை சோனியா காந்தி அவர்களே! நீங்கள் தியாகத்தின் உருவம்.
எங்கள் தமிழ் மண்ணில் உங்கள் கணவரை இழந்தீர்கள். நாங்களும் பாதிக்கப்பட்டோம். எங்கள் வீடுகள், மானம் எல்லாம் எரிக்கப்பட்டது. நீங்கள் உங்கள் கணவரை இழந்தீர்கள். ஆனால் நீங்கள் தியாகத்தின் உருவம். ஏன் தெரியுமா? உங்கள் மாமியாரை சுட்டுக் கொன்ற சீக்கிய இனத்தவரை மன்னித்து அந்த சீக்கிய இனப் பிரமுகரையே இந்திய பிரதமராக்கினீர்களே அதற்குத்தான் நீங்கள் தியாகத்தின் உருவம். பிரதமர் பதவியைத் தூக்கி எறிந்ததற்காக அல்ல.
அந்த சீக்கிய இனத்தின் மீது காட்டிய கருணையை எங்கள் தமிழினத்தின் மீது காட்டக் கூடாதா? என்றார் வைரமுத்து.
இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசின் திட்டக் குழுத் துணைத் தலைவர் மு.நாகநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கவிஞர்கள் அறிவுமதி, பொன்.செல்வகணபதி, மு.மேத்தா, இயக்குநர்கள் சீமான், செல்வபாரதி, குகநாதன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலக்கிய அணி பொருளாளர் கயல் தினகரன், மாநில தொண்டரணிச் செயலாளர் பொள்ளாச்சி மா.உமாபதி, வடசென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் பலராமன், தி.மு.கவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உசேன், ஜெ.அன்பழகன், பாட்டாளி மக்கள் கட்சியின் துணைத் தலைவர் சி.ஆர்.பாஸ்கரன், சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள், தியாகராய கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பெருந்தொகையான எண்ணிக்கையில் பங்கேற்றுள்ளனர்.
இன்று மாலை 5 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்து வைக்கிறார்.

இதனிடையே அரக்கோணத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தலித் பெண்கள் இயக்க 8 ஆவது மாநில மாநாட்டில் சிறிலங்கா அரசாங்கத்துக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்தில், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு செஞ்சோலைப் பகுதியில் ஆதரவற்ற சிறுமிகள் மீது குண்டுகளை வீசி 55 மாணவிகளைக் கொன்றும் மேலும் 195 மாணவிகளைப் படுகாயத்திற்குள்ளாக்கிய இலங்கை இராணுவத்தினரைக் கண்டிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் தமிழ்நாடு தலித் பெண்கள் இயக்க நிர்வாகி பெர்னார்ட் பாத்திமா, தமிழ்நாடு அன்னையர் முன்னணி தலைவர் பேராசிரியர் சரசுவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காந்தி நகரில் நேற்று திங்கட்கிழமை அப்பகுதி பொதுமக்களால் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கொடும்பாவி எரியூட்டி அழிக்கப்பட்டது. இப்போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்லில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு அக்கழகத்தின் மாநில களப்பணி ஒருங்கிணைப்பாளர் தாமரைக்கணன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு தொழிற்சங்கத்தினர் மற்றும் அனைத்துக் கட்சியினர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.
நன்றி>புதினம்.

எம்.ஜி.ஆர். சிலைகளை சிதைத்த சிங்கள இராணுவமே!

ஆகஸ்ட் 29, 2006

ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கு அடித்தளமாகவும் அரணுமாக இருந்த மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். சிலைகளை சேதப்படுத்திய சிங்கள இராணுவம், தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
வைகோ இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
யாழ். குருநகர் மற்றும் வல்வெட்டித்துறையிலும் ஈழத்தமிழர்கள் நிறுவியிருந்த எம்.ஜி.ஆர். சிலைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியும் சிலைகளுக்கு தார் பூசியும் சிங்கள இராணுவத்தினர் வெறியாட்டம் போட்டுள்ளனர்.
சிங்கள இராணுவம் ஊரடங்குச் சட்டத்தை போட்டு பொது மக்களின் நடமாட்டத்தை முடக்கிவிட்டு எம்.ஜி.ஆர். சிலையில் தாரைக்கொட்டி தேசப்படுத்தியுள்ளார்கள். தமிழீழ மக்களின் போராட்டத்திற்கு அடிப்படையும் அரணும் அமைத்துக்கொடுத்ததில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பெரும்பங்கு உண்டு.
எனவே தமிழீழ மக்கள் எம்.ஜி.ஆர். அவர்களை நெஞ்சில் வைத்து போற்றுகின்றனர்.
இந்தச்செயல் ஈழத் தமிழர்கள் மனதையும் தாய்த்தமிழகம் உள்ளிட்ட உலகெங்கும் வாழும் தமிழர்கள் நெஞ்சத்தையும் காயப்படுத்தி கொந்தளிக்கச் செய்துள்ளது.
இந்த அராஜகத்தில் ஈடுபட்ட சிங்கள இராணுவத்துக்கும், இராணுவத்தை ஏவி இயக்கி வரும் சிங்கள அரசுக்கும் கண்டனம் தெரிவிப்பதோடு தமிழர் தாயகத்திலிருந்து சிங்கள இராணுவம் வெளியேறுவதே பிரச்சினைகளுக்கு தீர்வாகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று வைகோ அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
நன்றி>புதினம்.