ஆகஸ்ட் 24th, 2006- ‍க்கானத் தொகுப்பு

சிங்களபெளத்த, தமிழ்இந்துமத மோதலாக பார்க்கவேண்டும்.

ஆகஸ்ட் 24, 2006

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்து அமைப்புகள் ஊர்வலம்
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும், இந்து மக்கள் கட்சி, பாரதீய பார்வார்ட் பிளாக் மற்றும் தனித்தமிழர்சேனை ஆகிய மூன்று இந்து இயக்கங்கள், இன்று வியாழக்கிழமை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருக்கும் இலங்கை துணைத்தூதரகத்தை நோக்கி எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடத்தினார்கள்.

இலங்கையில் பெரும்பான்மை சிங்களர்களுக்கும், சிறுபான்மை தமிழர்களுக்கும் இடையிலான மோதல், வெறும் இனப்பிரச்ச்சினை மட்டுமல்ல என்றும், சிங்கள பௌத்த மதத்திற்கும், தமிழ் இந்துக்களுக்கும் இடையிலான மதமோதலாகவும் இதை அணுகவேண்டும் என்றும் கூறினார், தமிழ்நாட்டின் இந்து இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளரான இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்.

சுமார் 80 கோடி இந்துக்கள் வசிக்கும் இந்தியா, தனது அண்டை நாடான இலங்கையில் இந்து தமிழர்கள் பாதிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கக்கூடாது என்று கூறும் அர்ஜூன் சம்பத், தமிழர்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசுக்கு எதிராகவும், ராணுவரீதியாக இந்தியா இதில் தலையிடவேண்டும் என்று கோருவதற்காகவே இன்றைய ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதன் முதல் கட்டமாக, சென்னையில் இருக்கும் இலங்கையின் துணைத்தூதரகம் மூடப்படவேண்டும் என்றும், இலங்கையுடனான தனது ராஜீய உறவுகளை இந்தியா துண்டித்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இன்று தாங்கள் சென்னையில் இருக்கும் இலங்கையின் துணைத்தூதரகத்தை நோக்கி ஊர்வலமாக செல்வதாகவும் அவர் கூறினார்.

சுமார் 50 பேர் கலந்துகொண்ட இந்த ஆர்பாட்ட ஊர்வலக்காரர்களை, இலங்கை துணைத்தூதரகத்திற்கு மிகத்தொலைவிலேயே இடைமறித்த காவல்துறையினர், அவர்கள் அனைவரையும் தங்கள் காவலில் எடுத்துச்சென்றனர். இவர்கள் அனைவரும் இன்று மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
நன்றி>பிபிசி.

யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதை எவராலும் தடுக்கமுடியாது.

ஆகஸ்ட் 24, 2006

“”விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியே தீருவார்கள். அதனை எவராலும் தடுக்க முடியாது “”என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். தர்மபுரியில் இடம்பெற்ற மாவட்ட ம.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு வைகோ மேலும் தெரிவிக்கையில்: கடந்த 1989ம் ஆண்டு இலங்கையில் உள்ள நிலவரங்களை கண்டறிய நான் என் உயிரையும் பொருட்படுத்தாமல் சென்றேன். அங்கே என்னையும், என்னுடன் வந்தவர்களையும் சிங்கள இராணுவம் பிடித்து விட்டதாக இலங்கை பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதை தெரிந்து கொண்ட கருணாநிதி விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்புடைய சுப்பிரமணியம் என்பவரை தொடர்பு கொண்டு எங்கள் நிலை குறித்து கேட்டார்.

“எங்களை இராணுவம் சுற்றி வளைத்த செய்தியை தெரிந்துகொண்ட கருணாநிதி நான் உயிரோடு திரும்ப மாட்டேன் என முடிவு செய்து கொண்டார். அதன் பின்னர் தான் நான் எழுதிய கடிதத்தை வெளியிட்டார். அந்தக்கடிதத்தில் நான் சிங்கள, இந்திய இராணுவத்திடம் பிடிபட்டால், கடுகளவும் தி.மு.க.,வுக்கு களங்கம் விளைவிக்காமல் என் உயிரை மாய்த்துக் கொள்வேன் என தெரிவித்து இருந்தேன். தற்போது 17 ஆண்டுக்கு பின் பொய்யான தகவல்களை கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கடந்த 1989ஆம் ஆண்டு இலங்கை பிரச்சினைக்கு பிரதமர் தீர்வு காண முடிவு செய்திருப்பதை நான் கெடுத்து விட்டதாக கருணாநிதி பொய் சொல்லி வருகிறார். இதற்கு மேல் நான் எதுவும் பேச விரும்பவில்லை. எதிர்வரும் 30 ஆம் திகதி சென்னையில் இலங்கை துõதரகம் முன்ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.

செப்டெம்பர் 1 ஆம் திகதி இலங்øகத்தமிழர்களுக்கு பாதுகாப்புக்கோரி சென்னையில் பேரணி நடத்தவுள்ளோம். இவ்வளவும் ஈழத்தமிழர்களுக்காகத் தான். சிங்கள இராணுவத்தை விரட்டியடித்து விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி விடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.
நன்றி>நிதர்சனம்.

ஐரோப்பியத் தடையே தற்போதைய சூழ்நிலைக்கு காரணம்.

ஆகஸ்ட் 24, 2006

தற்போது நிலவும் மோசமான சூழ்நிலைக்கு, தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் பிரகடனம் செய்தமையே காரணம் என, கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இன்று AFP செய்திச் சேவைக்கு செவ்வி வழங்கியிருக்கும் கண்காணிப்புக் குழுவின் ஓய்வு பெறும் தலைவர் உல்வ் ஹென்றிக்ஸன், தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்த பின்னர் ஏற்படக் கூடிய விளைவுகள் குறித்து, எழுத்து மூலம் விடுக்கப்பட்ட எச்சரிக்கையை உரிய முறையில் கவனத்தில் கொள்ளாது, பெரும் தவறை ஐரோப்பிய ஒன்றியம் இழைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கண்காணிப்புக் குழு தலைவர் கருத்துரைக்கையில்:
தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்வதால் ஏற்படக் கூடிய ஏழு வகையான மோசமான விளைவுகளை எதிர்வுகூறி, தடை அமுலுக்கு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் நாம் சுற்றிக்கை ஒன்றை அனுப்பியிருந்தோம். தற்போது நாம் எதிர்வுகூறிய சகல மோசமான விளைவுகளும் நிகழ்ந்தேறிவிட்டன.
இவ்வாறான நிலையில் தடைக்குப் பின்னர் ஏற்பட்ட விளைவுகளை அறிந்திருக்கவில்லை என்றோ அன்றி, அது குறித்த சமிக்ஞைகள் கிடைக்கவில்லை என்றோ ஐரோப்பிய ஒன்றியம் கூற முடியாது. நாம் அனுப்பிய சுற்றறிக்கை சரியான முறையில் கவனத்திற்கு கொள்ளப்படவில்லை என்றே நான் கருதுகின்றேன்.
இது (Brussels) பிறசல்ஸில் மிகவும் உயர்ந்த மட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவாகவே உணரப்படுகின்றது.என்னைப் பொறுத்த வரை, தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்ததன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் தவறிழைத்துள்ளது. போர்நிறுத்த உடன்படிக்கையில் சம தரப்பினராக தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறீலங்கா அரசாங்கமும் கைச்சாத்திட்ட நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட தடை ஒரு தவறான முடிவாகும். ஒரு தரப்பினர் திடீரென
பயங்கரவாதப் பட்டியலில் இணைக்கப்படும் போது, இலகுவான முறையில் நெருக்கடிகள் தோன்றிவிடும். அந்த நிலையே தற்போது ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்குப் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளை
நினைத்த மாத்திரத்தில் கையாள முடியும் என சிறீலங்கா அரசாங்கம் கருதியது.
யுத்தத்திற்கு பதிலாக சமாதானத்தை முன்னெடுப்பதில் சரியான முடிவுகளை எடுக்கக் கூடிய பொறுப்பு வாய்ந்த அரசாங்கமாக, சிறீலங்கா அரசாங்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் தவறாக எடைபோட்டது.||இவ்வாறு குறிப்பிட்டிருக்கும் கண்காணிப்புக் குழுவின் ஓய்வு பெறும் தலைவர் உல்வ் ஹென்றிக்ஸன், யுத்தத்தின் மூலம் நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியாது என்பதற்கு, அண்மையில் நிகழ்ந்த சமர்கள் சான்று பகர்வதாக சுட்டிக் காட்டியுள்ளார்.
நன்றி>புதினம்.

இலங்கைக்குள் சர்வதேசகுழு வடிவில் அமெரிக்கா புகுமா?

ஆகஸ்ட் 24, 2006

இலங்கையில் இடம்பெறும் பாரதூரமான மனித உரிமை மீறல்களை கண்காணிக்க சர்வதேசகுழுவை அனுப்ப வேண்டும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹியூமன் ரைட்ஸ் வோட்ச்
இலங்கையில் இடம்பெறும் பாரதூரமான மனித உரிமை மீறல்களை கண்காணித்து அவற்றை கட்டுப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையின் கீழ் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் “ஹியூமன் ரைட்ஸ் வோட்ச்’ எனப்படும் மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே ஹொங்கொங்கை தளமாகக் கொண்டியங்கும் ஆசிய மனித உரிமைகள் அமைப்பு கடந்த 17ஆம் திகதி வெளியிட்ட தமது விசேட அறிக்கையில்; பாரிய மனித படுகொலைகளும்,ஆட்கடத்தல்களும்,மோசமான மனித உரிமை மீறல்களும் காணப்படும் நாடாக இலங்கை உள்ளதாலும் மனித உயிர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாத ஒரு நாடாக உள்ளதாலும் உடனடியாக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகளை கண்காணிக்கும் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புவதோடு இப்பிரச்சினையை தீர்க்கும் மார்க்கமொன்றை காண ஐ.நா விரைந்து செயற்பட வேண்டும் என்றும் கோரியிருந்தது.

ஆசிய மனித உரிமைகள் அமைப்பைத் தொடர்ந்து, தற்பொழுது அமெரிக்காவின் மனித உரிமைகள் அமைப்பும் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள தமது அறிக்கையிலும் இதே கருத்தையே தெரிவித்துள்ளது

. இலங்கையில் நிலவும் மோசமான சூழல் காரணமாக சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்புவதன் மூலம் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறும் அனைத்து தரப்பினரையும் வெளிப்படையான அறிக்கையிடல் மூலம் இனங்காணலாம். அத்தோடு இந்த சர்வதேச கண்காணிப்பாளர்கள் பிரசன்னம் மனித உரிமைகள் துஷ்பிரயோகப்படுத்துவதை நிறுத்த உதவும் என்றும் அவ்வமைப்பு கூறியுள்ளது.

மேலும் கடந்த 11ஆம் திகதி முதல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் மோதல்களினால் சுமார் 500,000 மக்கள் வெளித்தொடர்புகள் அற்று, உணவு,நீர் என்பனவற்றிற்கு கஷ்டப்படும் நிலைமையைக் கருத்திற்கொண்டு அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் உணவு,நீர் மற்றும் மருந்து வகைகள் உட்செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நியூயோர்க்கில் தலைமையகத்தைக் கொண்டியங்கும் “ஹியூமன் ரைட்ஸ் வோட்ச்’ வெளியிட்டிருக்கும் அறிக்கையின் சாராம்சம் பின்வருமாறு;

யாழ்குடாநாட்டில் இடம்பெற்று வரும் மோதல்களின் போது மக்கள் பாரதூரமாக பாதிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கப்படவில்லை.

ஆயுதப்பிணக்குகளின்போது மக்களுக்கு முறையான பாதுகாப்பு கிடைக்கப்பெறுவதை பிணக்குகளில் சம்மந்தப்பட்ட தரப்பினர் உறுதிப்படுத்த வேண்டும் என சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் குடியிருப்புக்களுக்கருகில் முகாமிட்டு இராணுவத்தினரை நிலைகொள்ள வைப்பது,இராணுவ தாக்குதல் உபகரணங்களை அமைப்பது,மற்றும் இராணுவ இலக்குகளுக்கு அருகில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற விடாமல் தடுப்பது என்பன மனிதாபிமான சட்ட விதிகளுக்கு முரணானது.

பிணக்குகளில் சம்பந்தப்பட்ட தரப்புகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் உள்ள மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற ஆவண செய்ய வேண்டும்.மனிதாபிமான தொண்டர் அமைப்புகளை உணவு,மருந்து உட்பட்ட அத்தியாவசிய பொருட்களை ஆபத்துக்குட்பட்ட மக்களுக்கு வழங்க மோதல் பிரதேசங்களுக்கு அனுமதிக்க வேண்டும்.

ஆயினும் சர்வதேச மற்றும் உள்ளுர் தொண்டர் நிறுவனங்கள் அச்சுறுத்தலுக்கும், தாக்குதல்களுக்கும்,வன்முறைகளுக்கும் உள்ளாகியுள்ளன.

இவ்வாறான செயற்பாடுகளினால் இவ்வமைப்புகள் நிரந்தரமாக வடக்கு கிழக்கில் இருந்து வெளியேறும் அபாயம் உள்ளது.

அண்மையில் பிரான்ஸ் நாட்டின் தொண்டர் நிறுவன ஊழியர்கள் 17 பேர் கொடூரமாக கொல்லப்பட்டது, மற்றும் திருகோணமலையில் இடம்பெயர்ந்த மக்களுக்காக கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்களை அப்பகுதிக்கு செல்ல விடாமல் தடுத்தமை, மூதூரில் சர்வதேச தொண்டர் ஸ்தாபனங்களின் மீதான கைக்குண்டு தாக்குதல்கள், மற்றும் கிழக்கில் சில நகரங்களில் தொண்டர் ஸ்தாபன அமைப்புகளில் வேலை செய்த பெண்கள் புலிகளால் அச்சுறுத்தப்பட்டமை ஆகிய சம்பவங்கள் தொண்டர் நிறுவனங்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது.

அரசாங்க அதிகாரிகள், மற்றும் பல அரசியல் கட்சிகள் என்பனவும் அரசசார்பற்ற அமைப்புகள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தவன்னமுள்ளன.

சுனாமி மீள்கட்டுமான திட்டங்கள் தாமதமாகியமைக்கும் இவ்வமைப்புக்களையே குறை கூறியுள்ளனர். எவ்வாறாயினும் பாதிக்கப்படும் மக்களுக்கு இவ்வமைப்புகள் உதவி புரிவதை தடுக்கலாகாது.

இணைப்பு : newstamilnet.com
Wednesday, 23 Aug 2006 USA

கண்காணிப்பு தலைவரின் கருத்துக்களால் அரசுகொதிப்பு.

ஆகஸ்ட் 24, 2006

சர்வதேச போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தற்போதைய தலைவர் உல்ஃப் ஹென்றிக்சன், கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட 17 அரசசார்பற்ற நிறுவன ஊழியர்கள் குறித்த விசாரணைகளை, சிறிலங்கா அரசு திட்டமிட்டே குழப்பி வருவதாக வெளியிட்ட கருத்தால், அரச உயர்மட்டம் கொதிப்படைந்துள்ளது.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலான உல்ப் ஹென்றிக்சன், கடந்த வார இறுதியில், ரொய்ட்டர்ஸ் சர்வதேச செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய செவ்வியில், மனிதாபிமான செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் சர்வதேச மனிதஉரிமை அமைப்பொன்றின் ஊழியர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட விடயத்தில், கண்காணிப்புக் குழுவினர் விசாரணைகளை மேற்கொள்ள எத்தனித்தபோது, சிறிலங்கா அரச பக்கத்திலிருந்து திட்டமிட்டே தடைகள் போடப்பட்டதுடன், வேண்டும் என்றே பல்வேறு குழப்பங்களும் உருவாக்கப்பட்டன என்று தெரிவித்திருந்தார்.
வேண்டுமென்றே தடைகளைப் போடுகிறார்கள் என்றால், எதையோ மறைக்க முயற்சிக்கிறார்கள் என்றுதான் அர்த்தம் என்று தெரிவித்த ஹென்றிக்சன், விடுதலைப் புலிகள்தான் செய்தார்கள் என்று குற்றம் சுமத்திய அரசு, ஏன் கண்காணிப்பாளர்களின் விசாரணைகளைத் திட்டமிட்டே தடுக்க வேண்டும் என்றும் கேள்வியெழுப்பினார். உண்மைகள் வெளியே வந்துவிடும் என்று சிறிலங்கா அரசு பயப்படுவதாகவே தான் கருதுவதாகவும் மேலும் விளக்கியிருந்தார்.
இந்த கருத்துக்களால் கொதிப்படைந்த சிறிலங்கா அரசு, கண்காணிப்புக் குழுவையும், அதன் தலைவரையும் கண்டித்துள்ளது. கொழும்பு பத்திரிகையொன்றை அழைத்து, தான் விசேட பேட்டியொன்றைத் தரவிரும்புவதாகத் தெரிவித்த பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல, கண்காணிப்புக் குழுவினரின் இந்தக் குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா அரசு அடியோடு மறுப்பதாகத் தெரிவித்தார்.
அவர்களது விசாரணைகளைத் தொடர்வதற்கு சிறிலங்கா அரச தரப்பிலிருந்து தடைகள் போடப்பட்டு, உண்மைகளை மறைப்பதாக இருந்தால், நாம் சர்வதேச பிரதிநிதிகள் வந்து விசாரிக்கலாம் என்று அழைப்பு விடுத்திருக்க மாட்டோம் என்று தெரிவித்த ரம்புக்வெல, அவுஸ்திரேலிய விசேட பிரேத பரிசோதகர்களை, சிறிலங்காவுக்கு வந்து இது விடயமாக ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அழைத்திருக்காது என்றும் விளக்கினார்.
தருணத்திற்குத் தருணம், கண்காணிப்புக் குழுவினர், சிறிலங்கா அரசிற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவது தமக்கு ஆச்சரியம் தருகிறது என்றும் ரம்புக்வெல கூறினார். எனினும், அவுஸ்திரேலிய பிரேத பரிசோதகர்கள் வருவதற்கு அழைப்பு விடுத்த சிறிலங்கா அரசு, ஏற்கனவே இலங்கையிலுள்ள கண்காணிப்புக் குழுவினரை, விசாரணைகளை மேற்கொள்ள ஏன் அனுமதிக்கவில்லை என்பதற்கு, ரம்புக்வெல விளக்கமெதனையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.