இலங்கையில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், விடுதலைப்புலி ஆதரவு அமைப்புகளின் செயல்பாடுகள் தமிழகத்தில் உத்வேகம் பெற்றுள்ளன.
உள்ளரங்கு கூட்டங்கள் நடத்தி வந்த புலி ஆதரவு அமைப்புகள் தற்போது ஊர்வலம், கருத்தரங்குகள் என மக்களிடம் பிரசாரத்தை தொடக்கியுள்ளன. இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பொது மக்களிடமிருந்தே பணம் வசூலிக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி வரும் `புரட்சிகர இளைஞர் முன்னணி’ என்ற அமைப்பு தற்போது புலி ஆதரவு கோஷத்தை தீவிரப்படுத்தியுள்ளது. விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த அமைப்பு தமிழகம் முழுவதும் பிரசார இயக்கத்தை தொடக்கியுள்ளது.
கடந்த ஜூலை 10 ஆம் திகதி சென்னையிலும், ஜூலை 16 ஆம் திகதி திருப்பூரிலும் பிரசார இயக்கத்தை நடத்தி முடிந்துள்ளது. ஜூலை 23 திகதி மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் ஊர்வலம், கருத்தரங்கு நடத்தவுள்ளது. இதேபோல திருநெல்வேலி, ஈரோடு, காங்கேயம், திருப்பத்தூர், ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களிலும் பிரசார இயக்கம் நடத்தப்படவுள்ளது.
இங்கு நடக்கும் கருத்தரங்குகளில் நெடுமாறன், சுப.வீரபாண்டியன், புதுக்கோட்டை பாவாணன், பரந்தாமன் உட்பட விடுதலைப்புலி ஆதரவாளர்கள் பலர் பங்கேற்கின்றனர்.
இணைப்பு : newstamilnet.com


