சொந்த நாட்டை பாதுகாக்க முடியாத இந்தியா இலங்கையரசை பாதுகாக்க உதவி வழங்குகிறது திருமாவளவன் விசனம்.
இலங்கை அரசுக்கு உதவுவதை விட்டுவிட்டு சொந்த நாட்டுப் பாதுகாப்பை இந்தியா கவனிக்கட்டும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற “பொடா” எதிர்ப்பு மாநாட்டுக் கூட்டத்தில் தொல்.திருமாவளவன் மேலும் பேசியதாவது;
“இந்தியாவில் தொடர்ச்சியாக தொடர் குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தியாவின் பாராளுமன்றம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியாவின் இதயப்பகுதியான மும்பையில் ரயில் வண்டிகளிலே குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் உளவுத்துறையால் இக்குண்டுவெடிப்பை தடுக்க முடியவில்லை. சொந்த நாட்டுக்குரிய பாதுகாப்பைச் செய்ய முடியாத இந்தியா, இலங்கை அரசுக்கு ராடார் கருவிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்தில் சிங்களவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். முதலில் தனது நாட்டின் பாதுகாப்பிலே இந்தியா கவனம் செலுத்தட்டும்.
ஈழம் என்றால் புலிகள் – புலிகள் என்றால் ஈழம் என்பதுதான் எமது நிலைப்பாடு. கூட்டணிக் கட்சிகளிலே இடம்பெறுவது என்பது தேர்தல் அரசியல் கூட்டு. கூட்டணிக் கட்சிகளிலே இடம்பெற்றிருக்கிறோம் என்பதற்காக எங்களை எவரும் கட்டுப்படுத்த முடியாது.
“பொடா” சட்டம் கண்டு அஞ்சுகிறவர்கள் அல்ல நாம். பொடா சட்டத்திலே கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட காலத்திலேயே புலித் தேசத்துக்குப் போய் வந்தவன் நான். தேர்தல் அரசியல் மாறுபாடுகளைக் கடந்து தமிழ்த் தேசிய பிரச்சினையில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.’
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் செந்திலதிபன் பேசுகையில், “ஈழத்திலே இருக்கிற எம் பிள்ளைகளுக்கு 5 ஆண்டுகாலமாக எதுவித ஊதியம் எதுவும்பெறாமல் கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என்றார்.
இக்கூட்டத்தில் “பொடா” வழக்குகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில் 914 நாட்களுக்குப் பின்னர் முதல் முறையாக பொதுக்கூட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உரையாற்றினார்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் செயலாளர் வே.ஆனைமுத்து, பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை க.ராசேந்திரன், தமிழ் தமிழர் இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, பேராசிரியர்கள் சரசுவதி, கல்யாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இணைப்பு : newstamilnet.com


