ஜூன் 17th, 2006- ‍க்கானத் தொகுப்பு

தடை அநாகரிகமானது: டென்மார்க் அமைதிச்சபை கண்டனம்.

ஜூன் 17, 2006

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடை அநாகரிகமானது என்று டென்மார்க் நாட்டின் அமைதிச் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
டென்மார்க் அமைதிச் சபையின் பிரதித் தலைவர் லெவி கே. ப்ரவுச் இது குறித்து கூறியுள்ளதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பியத் தடையானது அமைதியை உருவாக்காது. அமைதியின் பக்கத்தைத் தவிர எந்த ஒரு பக்கச் சார்பு நிலையையும் நாம் மேற்கொள்ளமாட்டோம்.
இந்தப் பிரச்சனையில் தொடர்புடைய இருதரப்பினருமே வன்முறையை கையாளுகின்றனர். அனைத்து வகையிலான வன்முறைகளையும் நாம் கடுமையாக எதிர்க்கிறோம்.
இருதரப்பினரையும் ஒரே பாதையில்தான் சர்வதேச சமூகம் அணுக வேண்டும். வன்முறையை யார் உருவாக்குகிறார்கள் என்பது குறித்து உரிய விசாரணை நடத்திய அதற்குப் பொறுப்பான நபர்களை அடையாளப்படுத்த வேண்டியது அவசியமானது.
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்திவிட்ட பின்னர் அமைதிப் பேச்சுக்களை நடத்துவது என்பது கடினமானது. இதனால் அப்பாவித் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவர். ஏனெனில் இலங்கைத் தீவிலும் சிறிலங்காவின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் வாழுகிற தமிழர்களுக்காக குரல் கொடுக்கிற பிரதான அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளனர்.
நாம் நோர்வேயின் வழியைத்தான் பின்பற்றுவோம். ஐரோப்பிய ஒன்றியத்தை பின்பற்றமாட்டோம். நோர்ட்டிக் அமைதி குழுவின் அங்கமாகவே நாங்கள் உள்ளோம். ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதிக்கிற முடிவுகளுக்கு அப்பால் அமைதிக்கான ஆதரவைத் தர வேண்டும். ஐரோப்பியத் தடைய அநாகரிகமானதாகவே நாம் பார்க்கிறோம்.
அமைதியை உருவாக்குவதில் ஸ்காண்டிநேவிய நாடுகள் நடுநிலையுடன் செயற்பட வேண்டியதை உலகுக்கு காட்ட வேண்டிய சூழ்நிலை இப்போது உள்ளது என்றார் அவர்.

நன்றி>புதினம்.

ஈழத்தில் போர் வெடிக்குமா?

ஜூன் 17, 2006

பதிலடி கொடுக்க நேரிடும் என்ற எச்சரிக்கையை சிறிலங்காவுக்கு எமது தலைமைப்பீடம் அனுப்பியுள்ளது: சு.ப.தமிழ்ச்செல்வன்

சிறிலங்கா இராணுவத்தின் வான் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க நேரிடும் என்று சிறிலங்காவுக்கு எமது தலைமைப்பீடம் எச்சரிக்கையை அனுப்பியுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இந்த எச்சரிக்கையை சிறிலங்காவுக்குத் தெரிவிக்குமாறு இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் அனுசரணையாளராகிய நோர்வேயின் சிறிலங்காத் தூதுவர் ஆகியோரை தமிழீழ விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டுள்ளனர் என்றும் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியுள்ளதாவது:

இலங்கையில் உள்ள கள நிலைமைகளைப் புரிந்து கொள்ளாமல் கெப்பிட்டிக்கொல்லாவ தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளை குற்றம்சாட்டி சில நாடுகள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அத்தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகளும் கண்டனம் செய்துள்ளனர்.

கெப்பிட்டிக்கொல்லாவ பயணிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கவில்லை என்றும் அக்கிளைமோர்த் தாக்குதலுக்கும் எமக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளோம்.

இத்தகைய கொடூரமான தாக்குதலுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை என்று மீண்டும் கூறுகிறோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்துகிற சக்திகள் குறித்து நாம் அவதானமாக உள்ளோம். அமைதி முயற்சிகளை எதிர்க்கும் அந்த சக்திகளே பொதுமக்கள் மீதான தாக்குதலை நடத்தி நிலைமையை மேலும் கொழுந்துவிட்டு எரியச் செய்துள்ளனர். ஒரு முழு அளவிலான யுத்தத்தை தூண்டியுள்ளனர்.

ஓஸ்லோவில் சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புடன் நடந்து கொள்ளாமை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தடைக்குப் பின்னைய சூழ்நிலையால் இருதரப்பு சமநிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அது இலங்கையில் ஒரு யுத்தத்தை நோக்கியுள்ளது.

விமானக் குண்டு வீச்சுக்கள் மூலம் பொதுமக்கள் குடியிருப்பை பொறுப்பற்ற முறையில் தாக்கியமைக்கு சிறிலங்கா அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்த நேரிடும் என்ற தமிழர் தலைமைப்பீடத்தின் கடும் எச்சரிக்கையை சிறிலங்காவுக்கு தெரியப்படுத்தி உள்ளோம் என்றார் சு.ப. தமிழ்ச்செல்வன்.

நன்றி: புதினம்

படையினரின் வெறியாட்டம் ஐவர் பலி! 44 பேர் காயம்.

ஜூன் 17, 2006

மன்னாரில் பொதுமக்கள் இடம்பெயர்ந்து தங்கியிருந்த பேசாலை தேவாலய முன்றலில் இன்று காலை சிறீலங்கா கடற்படையினர் மேற்கொண்ட கைக்குண்டுத் தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லபட்டதுடன் 44 பேர் காயமடைந்துள்ளனர்

அத்துடன் பேசாலைக் கடலில் வைத்து நான்கு மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6.45 மணியளவில் மன்னார் கடற்பரபில் இடம்பெற்ற மோதலை அடுத்தே கரையோரக் கிராமங்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளார்கள்.

இதன் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலை மற்றும் தேவாலயங்களில் தஞ்சம் புகுந்திருந்தனர்.

இவ்வாறு தேவாலயத்தில் தஞ்சம் புகுந்த மக்கள் மீது சிறீலங்கா படையினர் இந்த கொலை வெறியாட்டத்தை நடாத்தியுள்ளனர்.

இதில் பெண்னொருவர் சம்பவம் இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். மேலும் 44 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.

நன்றி>பதிவு.