யாழ்நூலகம் அது தமிழர்களின் ஆயுதம்.

By eelabarathi


நமது நாட்டின் பக்கம் உலகின் கவனத்தைத் திருப்பி நாம் நமது நாட்டின் சிறப்புப் பற்றியும், ஆற்றல் பற்றியும் பாட்டிலேபாடி சொல்லிலே சொல்விட்டோம். நீர்வளம் உண்டு. நிலவளம் உண்டு. என்றெல்லாம் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப்பினர் வழி முழுவதும் கயஸ்வாகனம், சினிமாவின் வருகை, எல்லாம் சரி எமது நாட்டின் கல்விநிலை பற்றிக் கேட்டால் நாம் வெட்கித்தலை குனியும் நிலைதான் இருக்கிறது.
அண்மையில் யாழ் பல்கலைக்கழக உதவி நூலகரினால் கல்லூரிகளின் அதிபர்கள்,ஆசிரியர்களுக்கான நூலகமும் அதன் பயன்பாடும் பற்றி ஒரு கருத்தமர்வு நடாத்தப்பட்டது. ‘கற்றது கைமண்ணளவு’ என்று தொடங்கியவர் நாம் கற்றறிந்தது 1 வீதமான அறிவுதான் மீதி 99 வீத அறிவை எங்கே? எப்படி? பெற்றுக்கொள்வது என வினா எழுப்பினார். உண்மையிலேயே 99 வீத அறிவை உலக நூலகங்களிலிருந்தே பெற்றுக்கொள்ளமுடியும் என்பதைத் தெளிவு படுத்தினார்.
நூலகம் பாடசாலைகளிலும் இருக்கவேண்டும். ஆனால் எமது வன்னிப் பெருநிலப்பரப்பு பாடசாலைகளில் நாம் படிக்கும் காலம் தொட்டு இன்றுவரையும் ஒரு சிறிய அறையில் விளையாட்டு உபகரணங்கள், விஞ்ஞான ஆய்வுகூட உபகரணங்கள், மனையியற் கூட உபகரணங்களுடன் கூடவே நூலக புத்தகங்களும் அடுக்கப்பட்டிருந்தன. அந்த அறைக்குள் இருப்பதற்கு இடமில்லை. அப்படியிருக்கும்போது எப்படி நல்ல நூல்களைத்தேடி எடுத்துக் கற்கமுடியும். அன்று பாட்டி சொன்ன பாண்டவர் கதையும் ஆத்திசூடியும, சிலப்பதிகாரமும், கந்தபுராணமும்தான் எமக்குத் தெரிந்த சிறிய அறிவு. 21ம் நூற்றாண்டு தகவல் தொழில்நுட்ப ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டு பலவேலைகள் துரிதகதியில் நடந்தேறிக் கொண்டிருக்கும் உலகில் நாமும் ஒரு மூலையில் முடங்கி இருப்பது வேதனைக்குரிய விஷயமாகும்.
இன்று மாறிவரும் உலகில் கல்வித்திட்டங்களும், கல்விக்கொள்கைகளும் பிரிவுபடுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. நூலகத்தை முன்னுரிமைப்படுத்தி கல்வித்திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கும் இவ்வேலையில் இலங்கையின் தென்பகுதியில் நூலகங்கள் கணனி மயப்படுத்தப்பட்டிடுக்கொண்டிருக்கும் போது இலங்கையின் வட புறத்தில் குறிப்பாக வன்னியில் 1AB தரப் பாடசாலைகளில் கூட நூலகம் இல்லாத அவல நிலை. எமது பிரதேசத்தில் 1AB பாடசாலையின் நூலகத்திற்காக அரசால் நிதி ஒதுக்கப்பட்டு 1-1/2 ஆண்டுகளாகியும் கட்டடத்திற்கான அத்திவாரம் மட்டும் போட்டநிலையில் காலம் கழிந்து போகிறன.
அதுமட்டுமல்லாமல் அரசால் வழங்கப்படும் நூலகத்திற்கான நூல்கள் பெரும்பாலும் இன்றைய கல்விக்கொள்கைக்கு அமைவாக அல்லாமல் அபிதான கோஷம், அபிதான சிந்தாமணி, அபிராமி அந்தாதி என்றும் கடைகளில் விற்பனையாகாத புத்தங்களை மலிவுவிலையில் பெற்று அன்பளிப்பாகச் செய்து கொண்டிருக்கிறது. அரசின் இச்செயலானது குருடர்களைக் கூட்டிவந்து ‘வழிகாட்டுவோர் வாழும் இடம்” என்று பெயரிடுவதற்கு ஒப்பானதாகும்.
ஒழுங்கான நூலகமோ நூல்களோ இல்லாத நிலையில் நூலகங்களைப் பயன்படுத்துவது பற்றிய அறிவு எப்படி வரும்? இத்தனை அவலங்களையும் கண்ணுற்ற கேட்டறிந்த உதவி நூலகர் ‘கல்வியே எங்கள் மூலதம் கத்தி வைக்கிறது ஆழும் இனம்’ என்பதை தெளிவுபடுத்தினார். அவர் இறுதியாகக் கூறியது தத்தம் பிரதேசங்களையும், பிரதேச வாழ் மக்களையும் வளப்படுத்துவது அப்பிரதேச கல்விமான்களையே சாரும். சிறு துளியாகச் சேர்க்கப்படும் பணம் மூலம் மன வளத்தை ஏற்படுத்தும் உலக அறிவை உருப்படியான காரியத்தைத் தரும் நூலகத்தை உருவாக்கி வளப்படுத்த வேண்டும். அப்படிச் செயல் வடிவம் காட்டுவீர்களேயானால் என்னாலும் உங்களுக்கு உதவி செய்ய முடியும். என பெருந்தன்மையோடு கூறியதை கருத்தமர்வில் கலந்துகொண்ட அதிபர்கள், ஆசிரியர்கள் வரவேற்றனர்.
உள்ளதை மறைக்காதிருக்க வேண்டுமானால் எமது நாட்டுநிலைகண்டு உலகம் மதிக்கவேண்டுமானால் இந்த சூழ்நிலை மாற்றியாக வேண்டும். அறிவு ஆயுதமாகிவிட்ட நாட்களிலே வாழும் நாம் இனியும் இந்தக் காரியத்தைக் கவனியாதிருப்பது நாம் எமது நாட்டிற்கு மறைமுகமாகச் செய்யும் துரோகமாகும். பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள மட்டுமல்ல, ஏற்கனவே நமது மக்களுக்கு தெரிந்திருக்கும் (மூடநம்பிக்கைகள்) பல விஷயங்களை மறந்து போகச்செய்வதற்கும் பல நூல்கள் தேவை எனவே நூலகம் அவசியம் தேவை.
தமிழர்களின் அறிவு வளர்ச்சியும் அறிவுத் தேடலும்தான் சிங்கள அரசின் கண்களுக்குள் யாழ்நூலகம் அன்று தமிழர்களின் வலுமிகு ஆயுதமாகத்தென்பட்டது. இதன் நீட்சியாகவே யாழ் நூலகம் குறிவைக்கப்பட்டு தீ மூட்டி எரிக்கப்பட்டது.
1981 ஜீன் 01 அன்று இனவெறி பிடித்த காமினிதிசாநாயக்காவின் நேரடி கண்காணிப்பில் தீமூட்டப்பட்ட நிகழ்வை இங்கு நினைவுகூறுவது பொருத்தப்பாடுடையதாக இருக்கும்.
இருபத்து மூன்று ஆண்டுகளின் பின்னான இன்றைய நாட்களில் கூட நூலகத்தின் தேவையும் அதன் அவசியத்தை எமக்கு உணர்த்திய படி இருப்பதை எவரும் மறுதலிக்க முடியாது.

நன்றி>சூரியன்.கொம்

10 பதில்கள் “யாழ்நூலகம் அது தமிழர்களின் ஆயுதம்.” க்கு;

  1. Anonymous சொல்வதென்னவென்றால்:

    “எமது ஆயுதம் எது என்பதை எதிரியே
    தீர்மானிக்கிறான்.எரிக்கப்பட்டாலும்
    இதுவும் எங்கள் ஆயுதம்தான்!!!”.

  2. சோ.தமிழவன் சொல்வதென்னவென்றால்:

    இப்போது அந்த நூலக் எரிப்புக்கு வயது 25 வேறு கட்டுரைகளை பிரசுரிக்கையில் அது பிரசுரமான பதிவான திகதி குறிப்பிடுங்கள் …நூலங்கம் இந்தமாதில் ஒவோரு யாழ்பாணத்தானாலும் நினைவு கூரப்பட வேண்டியது ஷோபசக்த்தி இதை வெள்ளாள நூலகமென்பார்…..ஹி..ஹி..

    இப்போதும் என் அப்பா நூலகத்தை ஒருமுறை வெறித்து பார்த்துவிட்டே உள்ளே செல்வதை நான் கடைசியா யழ்ப்பணம் சென்ற போதும் பார்க்க முடிந்தது.

    இந்திய நண்பர்கள் இது பற்றி அறிந்திருக்க வய்பில்லை..தேடி படியுங்கள்

  3. ஈழபாரதி சொல்வதென்னவென்றால்:

    வணக்கம் அனாமி, தமிழன் ஆயுதத்தை ஏந்துவதுக்கு முதல் கல்வியை தூக்கிவிட்டான், கல்வி என்ற ஆயுதம்தான் சிங்களவனை வெறுப்பேற்றிய விடயம், தரப்படுத்தல் அதைத்தானே சொல்லிநிற்கிறது, அதற்கு பலிதான் இந்த யாழ்நூல் நிலையம், ஈழத்தமிழனின் வரலாற்றை கூறும் அரிய நூல்கள் எரிந்தே நாசமானது, ஆசியாவிலே பெரியநூல் நிலையம், கிடைத்தற்கரிய செல்வங்கள் அங்கெ கொட்டிக்கிடந்தன, அவற்றை எல்லாம் இணையத்தில் ஏற்றி இருந்தால் அழியாமல் இருந்திருக்கும். மோட்டு சிங்களவனுக்கு கல்வியை பற்றி என்ன தெரியும், சிங்களவனை வெல்ல தமிழருக்கு அது ஒரு பெரிய ஆயும் என்று மட்டும் தெரிந்திருக்கிறது.

  4. ஈழபாரதி சொல்வதென்னவென்றால்:

    வணக்கம் சோ.தமிழவன் உங்கள் வரவுக்கு நன்றி, ஆமாம் இது ஜூன் 2004ல் எழுதப்பட்டது, சுட்டி காட்டியமைக்கு நன்றிகள்.
    சாதி என்பது யாழ்ப்பாணத்தில் புரையோடிப்போய் இருப்பது, இப்போது வேர்கள் அறுபட்டு கொண்டுவருகிறது, இதைபோன்று சீதனம்,
    இவையெல்லாம் காலகாலமாக இருந்து வருபவை ஒரேநாளில், அவற்றில் இருந்து விடுபட முடியுமென நான் நினைக்கவில்லை, ஆனால் விடுபட முடியுமென நினைக்கிறேன்.

  5. வெற்றி சொல்வதென்னவென்றால்:

    //மோட்டு சிங்களவனுக்கு கல்வியை பற்றி என்ன தெரியும், //

    ஈழபாரதி, உங்களின் கோபம், உணர்வுகள் எனக்குப் புரிகிறது. இருந்தாலும் மேலே உள்ளது போன்ற கருத்துக்களைத் தவிர்த்துக்கொள்வது நல்லது என நினைக்கிறேன். எமது போராட்டம் சிங்கள மக்களுக்கெதிரானது அல்ல. எமது போராட்டம் சிங்கள பேரினவாதிகளுக்கும்[Chauvinist], அதிகாரவர்க்கத்தினருக்கும்[Ruling elites] மட்டுமே எதிரானது. நாம், சிங்கள முற்போக்குச்சத்திகளுடன் இணைந்து தமிழர் தரப்பு நியாயங்களை சாதாரண சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது எம்முன்னால் இருக்கும் கடமைகளில் ஒன்று. கொழும்புப் பல்கலைக்கழக அரசியல்துறைப் பேராசிரியர் உயன்கொட[அண்ணன் சிவராம் தான் இவரை எனக்கு அறிமுகப்படுத்தியவர்]
    போன்று தமிழ்மக்களின் அபிலாஷைகளை அறிந்த ஏற்றுக்கொண்ட பல சிங்கள மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
    நன்றி.
    பணிவன்புடன்,
    வெற்றி.

  6. ஈழபாரதி சொல்வதென்னவென்றால்:

    வணக்கம் வெற்றி, உங்கள் கருத்துடன் நான் உடன்படுகிறேன், நான்விழித்தது யாழ்நூலகத்தை எரித்தவர்களை, ஒரு அரசின் அமைச்சுப்பொறுப்பில் இருப்பவருக்கு, இப்படியான எண்ணம் வருகிறது என்றால், அவருக்கு தொண்டர்களாக இருப்பவரின் மனநிலை எப்படி இருக்கும், இவர்களை எல்லாம் தெரிவு செய்து அந்த மக்கள்தானே ஆட்சி கட்டிலில் அமர்த்துகிறார்கள்,
    ஒருசில நல்ல சிங்களவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், ஆனால் பெரும்பாண்மையினரின் பேச்சுத்தானே எடுபடும், முன்பு தமிழருக்கு ஆதரவாக இருந்த சிங்களவரை விட இப்போது குறவு என்பதுதான் எனது கணிப்பு, இடைவெளி அதிகமாகிவிட்டது.

  7. சுந்தரவடிவேல் சொல்வதென்னவென்றால்:

    இது குறித்து நான் முன்பெழுதிய பதிவொன்று:
    http://bhaarathi.net/sundara/?p=191

  8. ஈழபாரதி சொல்வதென்னவென்றால்:

    வணக்கம் சுந்தர வடிவேல் உங்கள் பதிவு பார்த்தேன், 97000 புத்தகங்கள் என்பது எவ்வளவு தொகை, ஏடுகள் கூட அங்கிருந்ததாக அறிந்தேன், அது எரிந்தது கண்டு உயிர்விட்ட தாவீது அடிகளாரை நினைக்கும் போது மனது கனக்கிறது.

  9. Anonymous சொல்வதென்னவென்றால்:

    இன்று எரிகிறது எமது நூல் நிலையம், கனத்த இதயத்துடன் ஓர் அகதித்தமிழன்.

  10. Kanags சொல்வதென்னவென்றால்:

    //இன்று எரிகிறது எமது நூல் நிலையம்//ஆமாம், இருபத்தைந்து வருஷங்கள். சாட்சியத்தை இங்கு பாருங்கள்.

மறுமொழி இடுக